இன்று தை அமாவாசையை முன்னிட்டு, நேற்று மாலை முதலே தென்மாவட்ட புண்ணிய ஸ்தலங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இன்று அதிகாலை முதலே தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடற்கரை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.
இந்துக்களின் புனித தினங்களில் தை அமாவாசை முக்கிய பங்கு வகிக்கிறது. இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வருகிற அமாவாசை நாட்களில் பித்ருக்களுக்கு புனித ஸ்தலங்களில் தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களிடையே வழக்கமாக இருந்து வருகின்றது.
தமிழகத்தின் புண்ணிய ஸ்தலமாக விளங்கும் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக இன்று தை அமாவாசை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பதற்காக அதிகாலை முதலே திரண்டனர். ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு நீண்ட வரிசையில் நின்று குளித்து அங்கு கூடியிருந்த வேத விற்பனர்களிடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். மேலும், திருச்செந்தூர், கன்னியாகுமரி, பாபநாசம், தாமிரபரணி, குற்றாலம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்.