ஈஷா யோகாவில் மாயமான ஊழியர்... உரிய விசாரணை நடப்பதாக காவல்துறை விளக்கம்!
ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி, காணாமல் போனவர் பற்றி உரிய விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் குலசேகரபட்டியை சேர்ந்தவர் விவசாயி திருமலை. இவர் காணாமல் போன தன்னுடைய சகோதரை மீட்டு தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 'தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி, ஈஷா யோகா மையத்தில் இருந்து தன்னை தொலைப்பேசியில் அழைத்து, கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா என கேட்டதோடு, 3 நாட்களாக ஈஷா யோகா மைத்திற்கும் வரவில்லை என்ற தகவலை கூறினர்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5 ம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த ஆலாந்துறை காவல்நிலையம், ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசாரணை நடத்தி வருகிறது. காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தி, காணாமல் போன தன் சகோதரர் கணேசனை மீட்டு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்' என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2016 முதல் வெவ்வேறு தேதிகளில், 6 பேர் காணாமல் போய் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "காணாமல் போனவர்கள் பற்றிய வழக்கை துரிதப்படுத்தி விசாரிக்க வேண்டும். உரிய பதில் தாக்கல் செய்யவேண்டும்" என உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, "இதுவரை 36 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. ஈஷா யோகா மைய ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும். ஏற்கனவே காணாமல் போன ஆறு பேர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியே சென்றுள்ளனர். அவர்களில் 5 பேர் திரும்ப வந்துவிட்டனர். மனுதாரரின் சகோதரர் தான் இன்னும் காணவில்லை" என்று குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை, நீதிபதிகள் ஜூன் 7ம் தேதி ஒத்தி வைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!
குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!
ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!