கர்நாடகா முதல்வருக்கு எதிராக கேரளாவில் சத்ரு பைரவி யாகம் நடந்ததா? அமைச்சர் பிந்து பரபரப்பு பேட்டி!

கேரள அமைச்சர் ஆர்.பிந்து
கேரள அமைச்சர் ஆர்.பிந்து

கேரளாவில் கர்நாடகா அரசுக்கு எதிராக விலங்குகளைப் பலியிட்டு அகோரிகள் சத்ரு பைரவி யாகம் நடத்தியதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு கேரள மாநில சமூக நீதி அமைச்சர் ஆர்.பிந்து பதிலளித்துள்ளார்.

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு எதிராக கேரளாவில் உள்ள ராஜராஜேஸ்வரி கோயிலில் மரணத்தை விளைவிக்கும் சத்ரு பைரவி யாகத்தை அகோரிகள் நடத்துவதாக பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது. சத்ரு பைரவி என்ற மரண யாகத்தில் 21 சிவப்பு நிற ஆடுகள், 3 எருமைகள், 21 கருப்பு நிற செம்மறி ஆடுகள், 5 பன்றிகள் பலியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

யாகம்
யாகம்

தனக்கும், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக இந்த கொடூர யாகம் நடத்தப்படுவதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், " கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் எனக்கு எதிராகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் சிலர் சத்ரு பைரவி யாகத்தை நடத்தியுள்ளனர்.

கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்
கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்

கேரளாவின் ராஜராஜேஸ்வரி கோயிலின் அருகில் இந்த யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தை யார் நடத்தியது, அதில் பங்கேற்றனர் என்பது குறித்து தெரியும். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை ஒழித்துக் கட்டவே இந்த யாகம் நடத்தப்பட்டது.

இதை அகோரிகளே நடத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக நம்பத்தகுந்த தகவல் என்னிடம் உள்ளது. கேரளாவில் மாந்திரீக சடங்குகள், யாகங்கள் நடத்தியவர்களுக்கு பின்னால் இருந்தவர்கள் அது குறித்த தகவல்களை அளித்துள்ளனர்.

கர்நாடக அரசியலைச் சேர்ந்தவர்கள்தான், இந்த யாகத்தை நடத்தியுள்ளனர். எங்களுக்கு கடவுளின் ஆசி இருக்கிறது.எனக்கு கடவுளின் பாதுகாப்பு இருப்பதால், இந்த யாகமெல்லாம் ஒன்றும் செய்யாது" என்று கூறினார்.

முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு எதிராக மரண யாகத்தை நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை கேரள மாநில சமூக நீதி அமைச்சர் பிந்து மறுத்துள்ளார்.

டி.கே.சிவகுமார், ஆர்.பிந்து
டி.கே.சிவகுமார், ஆர்.பிந்து

இதுகுறித்து அவர் கூறுகையில், ''நாட்டின் பிற பகுதிகளில் சமூகத்தை இருண்ட யுகத்துக்கு இழுக்கும் முயற்சியாக, இதுபோன்ற சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை. இருப்பினும், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியதுபோல் இதுபோன்ற யாகங்கள் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து தீவிமாக விசாரித்து வருகிறோம்,'' என்றார்.

கேரளாவில் இதுபோன்று நடக்காது என அம்மாநில தேவஸ்வம் அமைச்சர் ராதாகிருஷ்ணனும் தெரிவித்துள்ளார். இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தனும் கூறியுள்ளதுடன், டி.கே.சிவகுமாரின் கூற்றுகளை நிராகரித்தார்.

இதற்கிடையில், சிறப்புப் பிரிவு அளித்த அறிக்கையின்படி, கர்நாடகாவின் துணை முதல்வர் கூறுவது போல் கேரளாவில் உள்ள ஒரு கோயிலுக்கு அருகில் விலங்கு பலியிடப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in