உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5-ம் தேதி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
அக்டோபர் 8-ம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை சென்னையில் எதிர்கொள்கிறது. இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
அதன்படி, சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதல் பரிசாக ரூ.33 கோடி வழங்கப்படும். 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.16 கோடி பரிசும், அரையிறுதியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.82 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் நமது அணி கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.