தென் தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் 2 நாட்கள் கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இதன் காரணமாக சுமார் 60 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கடும் பொருளாதார நெருக்கடியில் மீனவர்கள் சிக்கித் தவித்தனர். நேற்று இரவுடன் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிப்பதற்காக நேற்று இரவு விசைப்படகுகள், ஃபைபர் படகுகள் மற்றும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட சிறிய ரக படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
இந்த மீனவர்கள் இன்று மதியத்திற்கு மேல் கரை திரும்புவார்கள் என்பதால் மீன்களின் வரத்து அதிகரிக்கும் எனவும் அவற்றின் விலை கணிசமாக குறையும் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ள விசைப்படகு மீனவர்கள் சில நாட்கள் தங்கி இருந்து மீன்களை பிடித்து விட்டு அடுத்த வாரம் முதல் கரைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய கடற்கரைகளில் நாளை இரவு 11 மணி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய கடல்சார் ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை பதிவில், இந்த கடற்கரைகளில் சுமார் 2.2 மீட்டர் வரை அலைகள் எழும்ப வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடற்கரையில் படகுகளை நிறுத்தி வைத்துள்ள மீனவர்கள் அவற்றை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் நாட்டு படகு மீனவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 நாட்களாக வேலையிழந்து தவித்து வந்த மீனவர்கள் பணியை துவங்கிய முதல் நாளிலேயே கடல்சீற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது சிறுமி சடலமாக மீட்பு... 15 மணி நேர போராட்டம் வீணான சோகம்!
மகள் இறந்த துக்கத்தில் விபரீத முடிவு எடுத்த தாய்... கதறும் கணவன்
விழுப்புரத்தில் பரபரப்பு... தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை!