"இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திங்கள் (இவிஎம்) ஒரு கருப்புப் பெட்டி. அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை" என, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மை தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டார்.
அந்தப் பதவில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தவிர்க்க வேண்டும். மனிதர்கள் அல்லது ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மூலம் ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது" என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
இவரது இந்தப் பதிவைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக உலகளாவிய அளவில் சூடுபிடித்துள்ளது.
இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. எலான் மஸ்கின் பதவிற்கு பதலளித்த பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “எலான் மஸ்கின் குற்றச்சாட்டு அமெரிக்கா உள்ளிட்ட பிற இடங்களுக்கு பொருந்தும். ஏனெனில் அங்கு இவிஎம் இயந்திரங்கள் இணைய இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்தியாவில் இவிஎம் இயந்திரங்கள் ப்ளூடூத், ஃவைஃபை, இன்டர்நெட் போன்ற எதனுடனும் இணைக்கப்படாதவை. எனவே அவை ஹேக் செய்யப்படுவதற்கு வழியே இல்லை" என பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், “இந்தியாவில் இவிஎம்-கள் ஒரு கருப்பு பெட்டி. அவற்றை யாரும் ஆராய அனுமதிக்கப்படுவதில்லை.
நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன. நிறுவனங்கள் பொறுப்புக்கூறல் இல்லாதபோது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது.” என தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது பதிவுடன், மும்பை வடமேற்கு மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரின் உறவினர்கள், இவிஎம் இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட போனை, பயன்படுத்தியதாக வெளிவந்த செய்தியையும் இணைத்துள்ளார்.