![ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு](http://media.assettype.com/kamadenu%2F2024-06%2Fa3f32e15-17a7-4e9c-976c-f482f0f83322%2Fdmdk3.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கள்ளச்சாராய விவகாரம் குறித்து புகார் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பெரும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஆளும் திமுக அரசின் மெத்தனப் போக்கே இவ்வளவு உயிரிழப்புகளுக்கு காரணம் எனவும், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனு. கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளும் திமுக அரசு மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.
இந்நிலையில், கள்ளச்சாராய உயிரிழப்புகள் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி, ஏற்கெனவே, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு இன்று நேரில் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆளுநர் ரவியிடம் புகார் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.