
புதுச்சேரி திருக்கனூர் அருகே வீடு புகுந்து புதுமணப்பெண்ணை கடத்த முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
லிங்காரெட்டி பாளையத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், தமிழக பகுதியான கரசானூர் கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ஒரு மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. முன்னதாக, அந்த பெண்ணை, புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முனியப்பன் என்கிற தினேஷ் என்பவர் ஒருதலையாய் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகும் தன்னுடன் வந்து விடுமாறு பெண்ணை முனியப்பன் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த முனியப்பன் பெண்ணை கடத்த திட்டமிட்டார்.
எனவே தனது நண்பர்களான லாஸ்பேட்டையை சேர்ந்த இளஞ்செழியன், இளவரசன், ராகுல், அசோக், அய்யப்பன் ஆகியோருடன் இரவு 7 மணி அளவில் லிங்கா ரெட்டிபாளையம் வந்தார். பின்னர் ஆயுதங்களுடன் வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்த முயற்சி செய்தனர்.
அப்போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதை அறிந்த கும்பல், அங்கிருந்து காரில் தப்பி சென்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காட்டேரிக்குப்பம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே அந்த கும்பல் தப்பிய கார் காட்டேரிக்குப்பம் வழியாக சென்றது.
அதனை போலீசாரும், பொதுமக்களும் இணைந்து வழிமறித்தனர். அப்போது முனியப்பன் தப்பியோடிய நிலையில், காரில் இருந்த இளஞ்செழியன் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய முக்கிய குற்றவாளியான முனியப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.
அவர்களிடம் இருந்து கார், 4 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரியில் ஆயுதங்களுடன் வீடு புகுந்து புதுப்பெண்ணை கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.