கன்னியாகுமரியில் 3,000 போலீஸார் குவிப்பு... கடல் நடுவே இன்று தியானத்தை தொடங்குகிறார் மோடி!

விவேகானந்தர் பாறையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விவேகானந்தர் பாறையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Updated on
2 min read

கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி இன்றுமுதல் 3 நாட்கள், 45 மணி நேரத்துக்கு தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார். இதையொட்டி, 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் ஏழாம் கட்டமான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அன்றே வெளியாக உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவடையும் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஆன்மிகத் தலங்களுக்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தியானம் செய்யும் மோடி
தியானம் செய்யும் மோடி

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவடைந்தபோது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரதாப்கர் கோட்டையிலும், 2019-ம் ஆண்டு தேர்தல் முடிவடைந்த போது இமயமலையில் உள்ள கேதார்நாத் குகையிலும் மோடி தியானம் மேற்கொண்டார். அதேபோல 2024 மக்களவைத் தேர்தல் நிறைவடையும் நிலையில் தற்போது கன்னியாகுமரியில் தியானம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். அதற்காக கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை, தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாக தேர்வு செய்துள்ளார்.

இதற்காக அவர் இன்று ( மே 30) டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வருகிறார். அங்கிருந்து பிற்பகல் 3.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் மாலை 4.35 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் சென்று மாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

விவேகானந்தர் நினைவு மண்டபம்
விவேகானந்தர் நினைவு மண்டபம்

அதன்பிறகு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளத்துக்கு சென்று தனிப்படகு மூலம் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் செல்கிறார். அங்கு விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு தியான மண்டபத்துக்கு சென்று மாலை 6 மணியளவில் தியானத்தைத் தொடங்குகிறார்.

மேலும், 3 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தியானம் செய்ய உள்ளார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1-ம் தேதி மதியம் 3 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

மூன்று நாட்கள் தியானம் முடிந்ததும் பிரதமர் மோடி 1-ம் தேதி பிற்பகலில் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து தனிப்படகு மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளம் வந்து சேர்கிறார். அங்கிருந்து காரில் ஏறி, அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார்.

இதன் பிறகு பிற்பகல் 3.25 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். மாலை 4.05 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் அவர் 4.10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். இரவு 7.30 மணிக்கு அவர் டெல்லியைச் சென்றடைகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார் தலைமையில், 8 எஸ்.பி.க்கள் அடங்கிய 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் கன்னியாகுமரியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கடற்படையினர், கடலோர காவல் படையினரும் தொடர்ந்து ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர். அத்துடன் மாவட்டம் முழுவதும் காவல்துறையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு
போலீஸ் பாதுகாப்பு

விவேகானந்தர் மண்டபம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடல் பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க கடலோர காவல் படையினர் கடந்த இரண்டு தினங்களாகவே இரவு, பகலாக கடலோர காவல்படை படகுகள் மற்றும் கப்பல்கள் மூலம் ரோந்து மூலம் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்களும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சிறிது தொலைவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு கடல் பகுதியில் மீனவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in