
கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பாய்லருக்கு செல்லும் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது.
ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வரும் கடலூர் சிப்காட் பகுதியில், நேற்று பகலில் தனியார் தொழிற்சாலையில் பாய்லர் பராமரிப்பு பணி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பணி முடிந்து இரவு சோதனை ஓட்டம் நடைபெற்றது.
அப்போது எதிர்பாராத விதமாக பாய்லருக்கு செல்லும் குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது. அந்த குழாயில் இருந்து ரசாயன புகை வெளியேறியதை அடுத்து அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. இதனால் தொழிற்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக தொழிற்சாலை ஊழியர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் குழாய் வெடிப்பு சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனாலும் தொழிற்சாலையில் இருந்து புகை வெளியேறியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீதிகளில் திரண்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.