தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலைவழக்கு தொடரவேண்டும் - உயர் நீதிமன்றம் அதிரடி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலைவழக்கு தொடரவேண்டும் - உயர் நீதிமன்றம் அதிரடி
Updated on
2 min read

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்த தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் லிங்க திருமாறன் தரப்பில், 'மனித உரிமை ஆணைய சட்டத்தின் படி ஏற்கனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது' என்றும் வாதிடப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

இந்த வாதத்தை மறுத்த மனுதாரர் ஹென்றி திபேன், 'மனித உரிமை ஆணைய சட்டப்படி பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும். அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க எந்த தடையும் இல்லை' என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது. நடந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அதிகாரிகளும் வருந்தவில்லை. அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? யார் பொறுப்பேற்பார்கள்' எனக் கேள்வி எழுப்பினர். பின்னர், வழக்கின் விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கப்படுவதாக அறிந்ததும் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் 2018 பிப்ரவரி 5 ஆம் தேதி தொடர் போராட்டத்தை தொடங்கினர். ஏற்கனவே செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

தூத்துக்குடியில் காற்றுமாசு படுவதாக கூறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடைபெற்ற அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் எதிராக 100-வது நாளாக பேரணியாக சென்றனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in