குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்... 50 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய வரம்!

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்... 50 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய வரம்!

குலசேகரன்பட்டினம்... தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ள இந்த சிறிய ஊர் இப்போது இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை இங்கு அமைக்கப்போவதே அதற்குக் காரணம். இதற்காக கடந்த 28-ம் தேதி தூத்துக்குடியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். 

ஏற்கெனவே, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. அங்கிருந்துதான் தற்போது ராக்கெட்கள் ஏவப்படுகின்றன. குலசேகரன்பட்டினத்தில் அமைய இருப்பது நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம். என்றாலும், ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரன்பட்டினம்தான் ராக்கெட் ஏவுவதற்கு பொருத்தமான இடம். எப்படி?

ஸ்ரீஹரிகோட்டா
ஸ்ரீஹரிகோட்டா

பொதுவாக, ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகே அமைந்திருக்க வேண்டும். ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்கள் தென்துருவத்தை நோக்கி, கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஏவப்படும். இவ்வாறு ஏவப்படும் ராக்கெட்டின் முழு ஆற்றலும் பயன்படுத்தப்படும் என்பதால் அதிக எடை கொண்ட ராக்கெட்களைக் கூட எளிதாக ஏவ முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளின் பாகங்கள் இலங்கை மீது விழுந்துவிடக்கூடாது என்பதால் முதலில் கிழக்கு நோக்கி ஏவப்பட்டு பின்னர், தென் துருவம் நோக்கித் திருப்பப்படுகிறது. இந்த முறையில் ஏவும்போது அதிகம் எரிபொருள் செலவாகும்.

ஸ்ரீஹரிகோட்டா, பூமத்திய ரேகை பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆனால், குலசேகரன்பட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. எனவே, குலசேகரன்பட்டினத்தில் இருந்து ஏவும்போது ராக்கெட்டுகள் நேராக தென் திசையை நோக்கி ஏவப்படும். இதனால் எரிபொருளும் அதிகளவில் மிச்சமாகும். ஏவுதளம் அமைக்கப்படும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ-க்கும் குறைவாக இருக்க வேண்டும். புயல், மழை தாக்கமும் குறைவாக இருக்க வேண்டும். குலசேகரன்பட்டினம் இந்த அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்யும் இடமாக உள்ளதால்தான் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்துக்கு இந்த ராக்கெட் ஏவுதளம் வந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்பு வந்தும் கைநழுவிப் போனது சோகம்.

நம்பி நாராயணன்
நம்பி நாராயணன்

1960-களில் சாதகமான நில அமைப்பும் தட்பவெப்பமும் கொண்ட தமிழகத்தின் தென்பகுதியில்தான் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க ‘விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் கமிட்டி’ திட்டமிட்டது. இந்தக் கமிட்டிதான் பின்னர் 1969-ல் இஸ்ரோ-வாக உருவானது.  அப்போது என்ன நடந்தது என்பதை இஸ்ரோவில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் தனது ‘Ready to Fire’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அப்போது தமிழகத்தின் முதல்வராக அண்ணா இருந்தார். தமிழகத்தில் விண்வெளி ஏவுதளம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரோவின் தலைவராக இருந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் தலைமையிலான குழுவினர் அண்ணாவைச் சந்திக்க வந்தனர். ஆனால், அண்ணாதுரைக்கு அப்போது கடுமையான தோள்பட்டை வலி. எனவே, வருவாய்த்துறை அமைச்சராக இருந்த கே.ஏ.மதியழகனை பேச்சுவார்த்தைக்கு அனுப்பினார். 

கருணாநிதி, அண்ணா, மதியழகன்
கருணாநிதி, அண்ணா, மதியழகன்

அமைச்சரின் வருகைக்காக விக்ரம் சாரபாய் நீண்ட நேரம் காக்கவைக்கப்பட்டார். காத்திருப்புக்குப் பின் வந்த அமைச்சரை அவரது உதவியாளர்கள் தான் ‘அழைத்து’ வந்தனர். பேச்சுவார்த்தையின் போது பொருத்தமில்லாத, சாத்தியமற்ற கோரிக்கைகளை அமைச்சர் மதியழகன் வைத்தார். இதனால், எரிச்சலடைந்த விக்ரம் சாராபாய், ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கான இடம் தமிழகம் அல்ல என்று முடிவு செய்தார்.

அப்போது ஆந்திர அரசு ஸ்ரீஹரிகோட்டாவில் 26,000 ஏக்கர் நிலம் வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது. இதையடுத்துதான், ஏவுதளம் அங்கு சென்றது. இதை அப்படியே தனது புத்தகத்தில் விளக்கி இருக்கிறார் நம்பி நாராயணன்!

எங்களின் கனவு என இன்றைக்கு யார் யாரோ ராக்கெட் ஏவுதளத்துக்கு சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பே ராக்கெட் ஏவுதளம் தமிழகத்துக்கு வந்திருக்க வேண்டும். அவ்வாறு வந்திருந்தால் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள், தொழில் வளர்ச்சி என்று தென் தமிழகம் தற்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றிருக்கும். அந்த விஷயத்தில் நாம் 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டாலும் இப்போதாவது நமக்கு ராக்கெட் ஏவுதளம் வரப்போகிறதே என்று பெருமைகொள்வோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in