லெபனானில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 2 தளபதிகள் உள்ளிட்ட 3 போராளிகளின் உயிரிழந்துள்ளனர். இதை ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல் நாட்டிற்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடும் போர் நடந்து வரும் நிலையில் காசா நகரம் இஸ்ரேல் படைகளால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தருவதாக கூறி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் நாட்டின் தூதரகம் மீது கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தின.
இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படையை சேர்ந்த தளபதிகள் 3 பேர் உட்பட 7 பேர் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் சூளுரைத்தது. அதன்படியே இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30-க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
எனினும், இதனை அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் உதவியுடன் இஸ்ரேல் முறியடித்தது. 79 ஆளில்லா விமானங்கள் மற்றும் 3 ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகள் ஆகியவற்றை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்தது. தொடர்ந்து, ஈரான் மீது இஸ்ரேல் பதிலடியாக தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இஸ்ரேல் அத்தகைய தாக்குதல் எதையும் நடத்தவில்லை. அதற்கு பதிலாக காசாவை தாக்கியது. இந்நிலையில் திடீரென தனது கவனத்தை லெபனான் நோக்கி இஸ்ரேல் திருப்பி உள்ளது. லெபனானின் தெற்கே குவார் தவுனைன் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நேற்று திடீரென வான்வழி தாக்குதலை நடத்தினர்.
இதில், மேற்கு பகுதியை சேர்ந்த ரத்வான் படைகளின் ராக்கெட் மற்றும் ஏவுகணை பிரிவுகளின் தளபதி முகமது உசைன் ஷாஹவுரி கொல்லப்பட்டார். அவர், லெபனானின் மத்திய மற்றும் மேற்கத்திய பகுதிகளில் இருந்து கொண்டு இஸ்ரேல் நிலப்பகுதியை நோக்கி தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளார், தடை தடுக்கும் விதமாகவே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதேபோன்று, இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பின் ராக்கெட் மற்றும் ஏவுகணை பிரிவை சேர்ந்த மஹ்மூத் இப்ராகிம் பத்லல்லா என்பவரும் கொல்லப்பட்டார். லெபனானின் தெற்கு பகுதியில் நடந்த தாக்குதலில், லெபனானின் எயின் ஈபெல் பகுதியில் கடலோர பிரிவை சேர்ந்த தளபதியான இஸ்மாயில் யூசெப் பாஜ் என்பவர் கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதலில் மொத்தம் மூன்று போராளிகளின் உயிரிழப்பை ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் உறுதி செய்துள்ளது. ஹமாஸ், ஈரான், லெபனான் என இஸ்ரேலின் பகை அதிகரித்துக் கொண்டே செல்வது மற்ற உலக நாடுகளை கவலை கொள்ள வைத்திருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!
புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!
தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!
நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!