
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த எலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இளவரசன் (40) என்பவர் திருப்போரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.
இவர் மனைவி மீனாட்சி, மகள் பிரசாந்தினி (5), மகன் பிரவீன் (3) ஆகியோருடன் வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்திற்கு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றார். பின்னர் குடும்பத்துடன் காரில் வீடு திரும்பினர்.
காரை இளவரசன் ஓட்டி வந்த நிலையில், வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமம் அருகே மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் இளவரசனின் மகன் பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இளவரசன் மற்றும் அவரது மகள் பிரசாந்தினி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மனைவி மீனாட்சி லேசான காயம் அடைந்தார்.
மூவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது செல்லும் வழியில் இளவரசன் உயிரிழந்தார்.
அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.