டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (இவிஎம்) பயன்பாட்டுக்கு எதிராக கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் தலைவரான எலான் மஸ்க், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தவிர்க்க வேண்டும். மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து சிறியதாக இருந்தாலும், இன்னும் அதிகமாக உள்ளது" என தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கரீபியன் தீவு நாடான போர்ட்டோ ரிக்கோவின் சமீபத்திய முதன்மைத் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான கருத்துக்களை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
அவரது இந்த கருத்து, உலக அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை அதிகரித்துள்ளது.குறிப்பாக இந்தியாவிலும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் இங்கு எலான் மஸ்கின் கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எலான் மஸ்க்கின் இந்த பதிவிற்கு, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பாதுகாப்பான டிஜிட்டல் வன்பொருளை (Hardware) யாராலும் உருவாக்க முடியாது என்பதைக் குறிக்கும் மிகப் பெரிய பொதுமைப்படுத்தும் அறிக்கை இது. தவறு.
இணைப்பு இல்லை, புளூடூத் இல்லை, வைஃபை, இன்டர்நெட் இல்லை. மறு புரோகிராம் (reprogram) செய்ய முடியாத புரோகிராமில் உள்ளே நுழைய வழியே இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்தியா செய்தது போல் கட்டமைத்து உருவாக்க முடியும். ஒரு பயிற்சியை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம், எலான்" என குறிப்பிட்டுள்ளார்.