
சிக்கிம் மாநிலத்தில் கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 15-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் வடக்கில் லோனக் ஏரி பகுதியில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால், மிக குறுகிய நேரத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டியது. இதனால் அங்குள்ள தீஸ்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ளம் கேங்டாக், மங்கன், பாக்கியாங், நாம்சி ஆகிய 4 மாவட்டங்களில் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தியது. 14 இடங்களில் பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் போக்குவரத்து முடங்கி உள்ளது.
தீஸ்தா நதியின் கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தில் வரும் 15-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படும் என அந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. எதிர்பாராத மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் காரணமாக விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.