'விடுதலை’ படப்பிடிப்பில் சூரிக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்... உண்மையை உடைத்த வெற்றிமாறன்!

இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன்
Updated on
2 min read

’விடுதலை’ படத்தில் நடிகர் சூரிக்கு ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.

’கருடன்’ சூரி
’கருடன்’ சூரி

அவர் பேசுகையில், ''’இன்றைய காலகட்டத்தில ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தர மறுக்கிறார்கள். டிஜிட்டல் தளங்களை நம்பித்தான் திரைப்பட வணிகம் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதைத்தான் நாம் மாடலாக வடிவமைத்து வருகிறோம். டிஜிட்டல் தளங்கள், தொலைக்காட்சி உரிமை ஆகியவற்றிலிருந்து படத்திற்கான முதலீடு கிடைக்கும். திரையரங்க வெளியீடு என்பது கூடுதல் போனஸ். இதை இந்த வருடம் மாற்றிய சில படங்களில் ’கருடன்’ திரைப்படமும் ஒன்று.

இந்த வகையிலான வணிகம் தான் ஜனநாயகம் மிக்கது என உணர்கிறேன். ஏனெனில் டிஜிட்டல் தளங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியவற்றிற்காக படத்தை உருவாக்கும் போது அவர்களுக்கு அந்தந்த காலகட்டத்தில் என்ன தேவையோ அதனைத்தான் அவர்கள் வாங்குவார்கள்.‌

அவர்களுக்கு தேவையானதை எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்குவார்கள். தேவையில்லை என்றால் அதனை திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். இது ஒரு புறம் மகிழ்ச்சியை அளித்தாலும் ஒரு படைப்பாளியாக, ஒரு தயாரிப்பாளராக திரையரங்குகளில் வெளியிட்டு, நேரடியாக மக்களிடம் கொண்டு செல்கிற போது படைப்பு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இது டிஜிட்டல் தளங்களில் இல்லை” என்றார்.

'கருடன்’ வெற்றிவிழாவில்
'கருடன்’ வெற்றிவிழாவில்

மேலும் அவர் பேசியிருப்பதாவது, “இந்தப் படத்தில் சசிகுமார் இணைந்தது முதலில் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. படத்தை பார்த்த பிறகு சசிக்குமாருக்கு இந்த கதாபாத்திரம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

சூரியின் உழைப்பு அசாதாரணமானது. ’விடுதலை’ படப்பிடிப்பின் போது அவருக்கு வலது தோள்பட்டை அருகே காயம் ஏற்பட்டது. ஓய்வு எடுக்காமல் இந்தப் படத்தில் நடித்தார். காயத்தை மேலும் மோசமாக்கி கொண்டார். இருந்தாலும் அவர் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்காக நூறு சதவீத உழைப்பை வழங்கி இருக்கிறார்.

சூரி
சூரி

அவர் இயக்குநரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நடிகர். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரை ஆச்சரியப்படுத்துவதற்கு எப்போதும் தயாராக இருப்பவர் நடிகர் சூரி. காட்சியை படமாக்கும் போது கதாபாத்திரத்தில் உணர்வை உள்வாங்கிக் கொண்டு நடிக்க முயற்சிக்காமல் கதாபாத்திரமாகவே இருக்க முயற்சி செய்பவர் சூரி.‌ இதனை சூரி தொடர்ச்சியாக வளர்த்தெடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பான நடிகராக கூடுதல் உயரத்திற்கு செல்வார்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in