ஈரோடு : பேருந்துக்கு நின்னா நேரா சொர்க்கம் தான்; அலறும் மக்கள்!
சத்தியமங்கலம் அருகே மலைக்கிராம மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மலை கிராம பகுதியான திங்களூர் பஞ்சாயத்து 8 கிராமங்களை உள்ளடக்கியது. இதில் தொட்டிகாடட்டி செல்லும் மக்களுக்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பல வருடமாக இருக்கும் இந்த நிழற்குடை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சமீபத்தில் பெய்த கனமழையால் மேற்கூரைகள் பெயர்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடியும் தருவாயில் உள்ளது. இதனால் இந்த நிழற்குடையில் நிற்கும் பயணிகள் ஒருவித அச்சத்துடன் நின்று வருகின்றனர்.
இது குறித்து திங்களூர் ஊராட்சியில் பலமுறை கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். மேலும் கிராம சபை கூட்டத்திலும் இந்த நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பயணிகள் நிழற்குடை இடிந்து விழுந்து பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.