திருச்சி விமான நிலையத்தில் 43 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை லக்கேஜ் பையில் தங்கத்தை ஒயர் வடிவில் மறைத்து கடத்தி வந்த போது சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் அவ்வப்போது தங்கம், போதைப்பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதை சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து, பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனையிட்டு வந்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான வகையில் வரும் பயணிகளை சோதனையிட்டனர். அந்த வகையில் நேற்று துபாயில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த UL 131 விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவர், தான் எடுத்து வந்த 3 லக்கேஜ் டிராலி பையின் உட்பகுதியில் தங்கத்தை வயர் வடிவில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பைகளில் இருந்து ரூ.43 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த நபரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.