
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை அளிக்க மாவட்ட வருவாய் அலுவலர், தொழில் பாதுகாப்புத்துறை இணை இயக்குநர் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சிவகாசி அருகே கங்காகுளம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ரெங்கப்பாளையம் கிராமத்தில் இயங்கி வருகிறது. அதன் அருகிலேயே பட்டாசு கடையும், சேமிப்பு கிடங்கும் உள்ளது.
இந்நிலையில் நேற்று வெளியூரில் இருந்து பட்டாசு வாங்க வந்த சிலர் சுந்தரமூர்த்தியின் கடைக்கு அருகே பட்டாசுகளை வெடித்து பார்த்துள்ளனர். இதில் ஒரு பட்டாசு வெடித்து கடைக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடையில் இருந்த பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. கடையின் பின்புறம் பெண்கள் பட்டாசுகளை பண்டல் போடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வெளியே வர முடியாத அளவுக்கு பட்டாசுகள் வெடித்து சிதறின.
இதனால் கடையின் உள்ளே இருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். அதேபோல், சிவகாசி அருகே மாரனேரி கீச்சநாயக்கன்பட்டியில் பட்டாசு விபத்து நிகழ்ந்தது.
முத்து விஜயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் வேம்பு (60) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். நேற்று ஒரே நாளில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர், தொழில் பாதுகாப்புத்துறை இணை இயக்குநர் ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.