மேட்டுப்பாளையத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறி இருசக்கர வாகன பேரணி சென்றதாக நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இந்த தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம், நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இறுதி நாள் என்பதால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில், பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று அன்னூரில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தலைமையில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று பாஜகவினர் வாக்கு சேகரித்தனர்.
பேரணி அன்னூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி குருக்கிலியாம்பாளையம், ஜெ.ஜெ நகர், ஜீவா நகர், பொகலூர், குமரன் குன்று வழியாக மேட்டுப்பாளையத்தில் முடிவடைந்தது. அப்போது, ஒவ்வொரு பகுதியிலும் சாலையோரம் இருந்த பொதுமக்களிடையே பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என கோஷமிட்டும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் வாக்கு சேகரிப்பில் பாஜகவினர் ஈடுபட்டு, இருசக்கர வாகனத்தில் பாஜக கொடியை கட்டியபடி பேரணியாக சென்றனர். அதில், எல்.முருகன் பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே தாமரைக்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டு கொண்டார். இதில் பாஜகவினர் ஏராளமானவர்கள் திரளாக பங்கேற்றனர்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி பாஜக வேட்பாளர் எல்.முருகன் தலைமையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் உட்பட பாஜகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுபோல, தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக எல்.முருகன் மீது இன்னும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!
குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!
ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!