இன்று தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம்... தொழிற்சங்கங்கள் அதிரடி!

இன்று தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம்... தொழிற்சங்கங்கள் அதிரடி!

நேற்று முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரப்படுகின்றன. இந்நிலையில், இன்று சென்னை மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டும், தமிழகம் முழுவதும் அனைத்து பணிமனைகளிலும் மறியல் போராட்டத்தையும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடத்த இருப்பதாக சிஐடியு மாநிலத்தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சௌந்தரராஜன்
சௌந்தரராஜன்

போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மற்றும் போக்குவரத்து சங்கங்கள் சார்பாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இதன் காரணமாக நேற்று முன் தினம் மாலை முதல் படிப்படியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள், நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசு பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பேருந்து இயக்கப்படும் என உறுதி அளித்து, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் சங்க உறுப்பினர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்நிலையில், சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, “ கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும். நாளை சென்னையில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் பல்லவன் இல்லம் முன்பு இன்று காலை 10 மணிக்கு மேல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரிய பேருந்து நிலையங்களிலும், பணி மனைகளிலும் இன்று முற்றுகை மறியல் போராட்டம் நடைபெறும்' என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும்ம் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in