தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனுக்களை மயிலாடுதுறை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின் தலைமை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்புடைய ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் வினோத், முன்னாள் ஒன்றிய செயலர் விக்னேஷ், செம்பனார்கோவிலை சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக முன்னாள் மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் மிரட்டியது உண்மை என்று தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வினோத் , விக்னேஷ், குடியரசு, உடந்தையாக செயல்பட்ட ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் மும்பையில் பதுங்கியிருந்த அகோரமும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குடியரசு, அகோரம் இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் அகோரம், குடியரசு ஆகியோரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் வினோத், முன்னாள் ஒன்றிய செயலர் விக்னேஷ் ஆகியோர் ஜாமின் கோரி மயிலாடுதுறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இந்த மனுக்களை விசாரித்த மயிலாடுதுறை நீதிமன்றம், இருவரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் வாசிக்கலாமே...
தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்
மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!
பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!