
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே முகூர்த்த நேரத்தில் மணமகன் தாலி கட்ட தயாரான போது, மணப்பெண் தாலியை பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவருக்கும், திருவாடனை பகுதியைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டு பெற்றோர்களும் பேசி முடிவு செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து இருவருக்கும் திருவாடானையில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில், முகூர்த்த நேரம் நெருங்கி மணமகன், மணமகளுக்கு தாலி கட்டுவதற்கு தயாரான போது, மணப்பெண் தாலியை பிடுங்கி வைத்துக் கொண்டார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாப்பிள்ளையிடம் தாலியைக் கொடுக்கும்படி மணப்பெண்ணிடம் அறிவுறுத்தினர்.
ஆனால் மணப்பெண் தாலியை கொடுக்க மறுத்து விட்டார். தாலியை உண்டியலில் போடப்போவதாக அவர் உறுதியாக கூறினார்.
தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், பெற்றோர்கள் தொடர்ந்து வற்புறுத்தி இந்த திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தனர் என்றும் கூறினார். மணமகன் ஆத்திரம் அடைந்ததை அடுத்து, மணப்பெண் திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை அனைவர் முன்னாலும் உறுதியாக கூறினார்.
இதையடுத்து மணமகன் காவல்துறையில் இது குறித்து புகார் அளித்தார். அதில் திருமணத்திற்காக மூன்று லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகவும், திருமணம் நின்றதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
தன்னுடைய விருப்பம் இல்லாமல் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து விட்டதாக மணப்பெண்ணும் புகார் அளித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் எவ்வளவோ சமாதானப்படுத்தியும், திருமணம் செய்து கொள்ள மறுத்து மணப்பெண், திருமணத்தை நிறுத்துவதில் உறுதியாக இருந்தார்.