மேடையிலேயே தமிழிசையை கண்டித்த அமித்ஷா... சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பரபரப்பு!

தமிழிசையை கண்டித்த அமித்ஷா
தமிழிசையை கண்டித்த அமித்ஷா
Updated on
2 min read

ஆந்திர மாநில அமைச்சரவை பொறுப்பேற்பு விழா மேடையில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை, மத்திய அமைச்சர் அமித்ஷா கடிந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மாநில பாஜகவின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் தமிழிசை சௌந்தர்ராஜன். பின்னர் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அவர், கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட அவர், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனிடம் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்று இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மாநில தலைவராக பதவி வகித்து வரும் அண்ணாமலை கூட்டணி வியூகம் அமைக்காததால் இரண்டாம் இடம் பெற நேர்ந்ததாக கருத்து தெரிவித்திருந்தார். மேலும் பல்வேறு வழக்குகள் மற்றும் புகார்களின் சிக்கி உள்ள திருச்சி சூர்யாவுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்தும் அவர் சூசகமாக விமர்சித்து இருந்தார்.

அமித்ஷா, வெங்கய்யா நாயுடுவுடன் தமிழிசை செளந்தர்ராஜன்
அமித்ஷா, வெங்கய்யா நாயுடுவுடன் தமிழிசை செளந்தர்ராஜன்

இந்நிலையில், விமான நிலையத்தில் இனி செய்தியாளர்களை சந்திக்க போவதில்லை என தெரிவித்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இருப்பதாகவும், செய்தியாளர்கள் சந்திப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதாகவும் காட்டமாக தெரிவித்து இருந்தார். இதனால் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் தற்போதைய தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியானது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு பாஜக நிலைக்குழு உறுப்பினரும், தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோரிடம் கட்சி மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

பிரதமர் மோடியுடன் அண்ணாமலை, தமிழிசை (கோப்பு படம்)
பிரதமர் மோடியுடன் அண்ணாமலை, தமிழிசை (கோப்பு படம்)

ஆந்திர மாநிலத்தில் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்று முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பொறுபேற்றார். கன்னாவரத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்று உள்ளனர். இந்த விழா மேடைக்கு வந்த தமிழிசை சௌந்தர்ராஜன், மரியாதை நிமித்தமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வணக்கம் தெரிவித்தார். அப்போது முகத்தை கடுமையாக வைத்தபடி தமிழிசையிடம் அமித்ஷா கடிந்து கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில், இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in