மறைந்த தனது தந்தை குறித்து நடிகை ஷெரின் உருக்கமானப் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்தப் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
’விசில்’ படத்தில் அழகிய அசுராவாக அசரடித்தவர் நடிகை ஷெரின். அதன் பிறகு ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் மற்றும் உடல் எடை அதிகரித்தது போன்ற காரணங்களால் தமிழ் சினிமாவில் இருந்து விலகியே இருந்தார்.
பின்பு, பிக் பாஸ் தமிழின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு கம்பேக் கொடுத்தார். பின்பு, விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் செஃபாக கலந்து கொண்டு அசத்தினார். ஃபேஷன், சமூகவலைதளத்தில் இன்ஃபுளூயன்சிங், மாடலிங் என பிஸியாக வலம் வருபவர் வாழ்வில் மீண்டும் சோகம் ஏற்பட்டிருக்கிறது.
அதாவது, நடிகை ஷெரினின் தந்தை காலமாகி இருக்கிறார். தனது தந்தைப் புகைப்படத்தைப் பகிர்ந்து அவரது மறைவு குறித்து உருக்கமாகப் பேசியிருக்கிறார். அதில், ‘அப்பா, உன்னை நான் அதிகம் நேசித்தேன். உன் அன்பிற்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கினேன். நீ மறைந்து ஒருவாரம் ஆகிவிட்டது. ஆனால், எனக்கு இன்றுதான் தகவல் கிடைத்தது.
செய்தியைக் கேள்விப்பட்டு என் இதயம் சுக்குநூறாக உடைந்து விட்டது. உன்னுடைய இந்தப் படம்தான் என்னிடம் இருக்கிறது. இதை என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் வைத்திருப்பேன். உன்னை மிஸ் செய்வேன். ரெஸ்ட் இன் பீஸ்!’ எனக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டப் பலரும் ஷெரினின் இந்த துயரத்திற்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.