”சூரியை இனிமேல் யாரும் பரோட்டோ சூரி எனக் கூப்பிட மாட்டார்கள். ’விடுதலை’ சூரி, ‘கருடன்’ சூரி என்றே கூப்பிடுவார்கள்” என நடிகர் சசிக்குமார் நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. குறிப்பாக, ‘விடுதலை’ படத்திற்குப் பிறகு நடிகர் சூரி கதையின் நாயகனாக ‘கருடன்’ படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் எனவும் பலரும் கூறி வருகின்றனர். ‘கருடன்’ படத்தில் நடித்திருந்த சசிக்குமார், சூரியை இனி யாரும் பரோட்டா சூரி எனக் கூப்பிட மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசியிருப்பதாவது, “’கருடன்’ படத்தில் முதலில் நட்புக்காக தான் நடித்தேன். என்னுடைய ‘சுந்தரபாண்டியன்’ படத்தில்தான் சூரி இன்னொரு ஹீரோ போல, முதன்முதலாக படம் முழுக்க வந்திருப்பார். இப்போது அவரை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. அதனால் தான் ‘கருடன்’ படத்தில் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
சூரியின் வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ’விடுதலை’ படத்தின் முதல் காட்சியிலேயே காமெடியன் சூரியை வெற்றிமாறன் மாற்றினார். இனிமேல் அவர் பரோட்டா சூரி கிடையாது. ’விடுதலை’ சூரி, ‘கருடன்’ சூரி என்றுதான் கூப்பிடுவார்கள்.
‘கருடன்’ படத்தில் பத்துபேரை அவர் அடிப்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் கதாநாயகன் ரெடி என்றுதான் அர்த்தம். சூரி இடத்திற்கு நிச்சயம் வேறொரு காமெடியன் வருவார்” என்று சூரியைப் பாராட்டி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.