ஜம்மு - காஷ்மீரில் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 9 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 பக்தர்கள் படுகாயமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் ரியாசியிலிருந்து நேற்று மாலை மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஒரு பேருந்தில் நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர்.
இந்தப் பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் படுகாயமடைந்தனர்.
விசாரணையில் ஆன்மிக பயணம் வந்தவர்கள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் ரியாசி மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் மோகித் சர்மா கூறுகையில், “பயங்கரவாதிகள் தாக்குதலில் படுகாயமடைந்த 33 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அடையாளம் உடனடியாக தெரியவரவில்லை.
ரஜவுரி, பூஞ்ச் பகுதிகளில் முன்பு அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது, ரியாசி மாவட்டத்திலும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கண்டறியும் பணியில் ரியாசி, ரஜவுரி மாவட்டங்களின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்திலிருந்து வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இதில், சம்பவ இடத்தில் சில உடல்கள் ஒரு மலையடிவாரத்தில் சிதறிக்கிடந்ததையும், சேதமடைந்த பேருந்தையும் காணமுடிகிறது.
ரியாசி மாவட்டத்தில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.