விமானிகள் இல்லாமல் விமானங்கள் பல மணி நேரம் தாமதம்… 130 பயணிகள் தவிப்பு!

விமானிகள் இல்லாமல் விமானங்கள் பல மணி நேரம் தாமதம்… 130 பயணிகள் தவிப்பு!

சென்னையில் இருந்து மதுரை செல்ல வேண்டிய இரண்டு விமானங்கள் பல மணி நேரம் தாமதமானதால் 131 பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4:55 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மதுரைக்கு புறப்பட வேண்டும். விமானத்தில் பயணிக்க 53 பேர் முன்னதாகவே வந்து தயாராக இருந்தனர். ஆனால் இரவு 7 மணி ஆகியும் விமானம் புறப்படவில்லை.

அதே போல், மாலை 6:10 மணிக்கு, சென்னையில் இருந்து மதுரைக்கு மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானத்தில் செல்ல 78 பயணிகள் இருந்தனர். அந்த விமானமும் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் மொத்தமாக 2  விமானங்களில் செல்ல வேண்டிய, 131 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு இரவு 8:30  மணிக்கு, 131 பயணிகளுடன் விமானம் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது.

தாமதத்திற்கான காரணம் குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளுக்கு  தெரிவிக்கவில்லை. ஆனால் விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள் இல்லாததால், காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.

இதனிடையே, மாலை 5:55  மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், டெல்லியில் இருந்து சென்னைக்கு இரவு 11:35 மணிக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டன. இரண்டு விமானங்களில் பயணிக்க, போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in