பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வழியாக அவ்வப்போது தங்கம், போதைப்பொருள் கடத்தல் நடந்து வருகிறது. கெம்பேகவுடா விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் விமான போக்குவரத்து கடந்த 12-ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்நிலையில் போக்குவரத்து தொடங்கப்பட்ட முதல்நாளே 2-வது முனையத்தில் 3 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது. துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
துபாயில் இருந்து வந்த பயணிகளை சோதனை செய்த போது, குறிப்பிட்ட 3 பெண் பயணிகள் மீது சந்தேகம் வந்ததை அடுத்து, அவர்களை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அதில், அவர்கள் ஆடைகளுக்குள் பற்பசை வடிவில் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 3 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தங்கம் கடத்திய 3 பெண்களை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.