
பிரபல நடிகை இலியானா குழந்தை பிறந்த பிறகு முதன்முறையாக அவரது கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழில் ‘கேடி’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை இலியானா டி குரூஸ், அதன் பின்னர், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். ஷங்கரின் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களும் நடிகை இலியானாவைக் கொண்டாட துவங்கினர். தொடர்ந்து பாலிவுட் சென்ற அவர், இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையாக மாறினார்.
இந்நிலையில் திடீரென, திருமணமாகாமலேயே தாம் கர்ப்பமாக இருப்பதாக நடிகை இலியானா தெரிவித்தார். ஆனால் கணவர் யார் என்பது குறித்து எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. இது அப்போது சர்ச்சையைக் கிளப்பியது.
இலியானாவின் கணவர் யார் என்ற சஸ்பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆகஸ்ட் 1-ம் தேதி இலியானா வெளியிட்டிருந்த பதிவில் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்திருந்தார். அப்போதும் கணவர் யார் என்பதை அவர் சொல்லவில்லை. ஆனால் கர்ப்பம் என்று இலியானா அறிவித்ததுமே கணவர் யார் என்று யூகங்கள் கிளம்பின.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்-ன் சகோதரர் மைக்கேல் டோலனை இலியானா காதலிப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது இலியானா அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இருவரும் கடந்த மே மாதம் 13-ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். குழந்தைக்கு கோயா பீனிக்ஸ் டோலன் என்று பெயரிட்டுள்ள தம்பதிக்கு நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.