வாகன விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அனுப்பிவைத்த நெகிழ்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை காமராஜர் சாலை நேப்பியர் பாலம் அருகே இன்று காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் மீது ஆட்டோ இடித்து சென்றது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தலைமைச் செயலாளர் இறையன்பு இதனை பார்த்து உடனே வாகனத்தை விட்டு கீழே இறங்கி ஓடிவந்தார். இதையடுத்து, காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, படுகாயம் அடைந்தவரை ஆம்புலன்ஸில் ஏற்றி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார் இறையன்பு.
இந்த விபத்து குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காயமடைந்த நபர் வேளச்சேரியை சேர்ந்த குமரேசன்(34) என்பதும் இவர் பணி நிமித்தமாக பூக்கடை சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுநரை தேடிவருகின்றனர்.