ஆந்திராவில் தனது சிறுநீரகத்தை 7 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற நர்சிங் மாணவி, ஆன்லைன் மோசடியில் சிக்கி 16 லட்ச ரூபாயை இழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆந்திரா மாநிலம், குண்டூர் மாவட்டம் பிரங்கிபுரத்தைச் சேர்ந்த மாணவி, ஹைதராபாத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்புகளுக்காக தனது தந்தையின் செல்போனை மாணவி பயன்படுத்தியுள்ளார். அப்போது அவரது தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து 80 ஆயிரம் ரூபாயை எடுத்து ஆஃப் மூலம் உடைகளை வாங்கியுள்ளார்.
இந்த விஷயம் சில நாட்களுக்குப் பின் தந்தையின் பணத்தை திரும்பிச் செலுத்த வேண்டும் என நண்பர்களை அணுகியுள்ளனர். அப்போது சிறுநீரகத்தை விற்றுப்பணம் ஈட்டலாம் என அவரது நண்பர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் சிறுநீரகத்தை விற்க நர்சிங் மாணவி, சமூக வலைதளங்களில் தேடியுள்ளார். அப்போது ஒரு இணையதளத்திதல் சிறுநீரகத்திற்கு 7கோடி ரூபாய் வழங்குவதாக விளம்பரம் இருந்துள்ளது. இதையடுத்து மருத்துவர் பிரவீன்ராஜ் என்பவரை மாணவி தொடர்பு கொண்டு சிறுநீரகத்தை விற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு முதல்கட்டமாக மூன்று கோடி ரூபாய் தருவதாகவும், சிகிச்சைக்குப் பிறகு மீதிப்பணத்தை தருவதாகவும் பிரவீன்ராஜ் கூறியுள்ளார்.
இதையடுத்து மருத்துவர் பிரவீன்ராஜ் பரிந்துரை செய்த மருத்துவப்பரிசோதனைகளை மாணவி செய்துள்ளார். இதன் பின் தான் பேசியபடி, மூன்றரை கோடி ரூபாயை மாணவியின் தந்தையுடைய வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டதாக பிரவீன்ராஜ் ஸ்கிரீன் ஷாட் அனுப்பியுள்ளார். ஆனால், தந்தையின் வங்கிக் கணக்கில் பணம் வரவில்லை.
இதுகுறித்து பிரவீன்ராஜினிடம் மாணவி கேட்டபோது, டாலரை ரூபாயாக மாற்ற 15 ஆயிரம் ரூபாய் செலுத்தும்படி கூறியுள்ளார். இதை நம்பி பணத்தை மாணவியும் செலுத்தியுள்ளார். இதுபோல கடந்த மார்ச் மாதம் முதல் அக்டோபர் வரை 16 லட்சம் ரூபாயை மாணவியிடமிருந்து பிரவீன்ராஜ் ஏமாற்றி வாங்கியுள்ளார். அத்துடன் மாணவியை நம்ப வைக்க பத்தாயிரம் ரூபாயை மட்டும் மாணவியின் தந்தையின் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். அத்துடன் டெல்லிக்கு வந்தால் நேரில் பணம் தருவதாகக் கூறி அழைத்துள்ளார். மாணவி அங்கு சென்றபோது பிரவீன்ராஜ் வரவில்லை.
இதன் பின் சில நாட்கள் கழித்து மேலும் ஒன்றரை லட்சம் ரூபாயை தரும்படி மருத்துவர் பிரவீன்ராஜ் கேட்டுள்ளார். இதனால் தந்தைக்கு பயந்து கஞ்சிகச்சர்லாவில் உள்ள ஒரு நண்பரின் வீட்டில் மாணவி தஞ்சமடைந்தார். அவரைக் காணவில்லை என தந்தை புகார் அளித்தார்.இதன் பின் போலீஸார், மாணவியை கண்டுபிடித்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஆன்லைன் மோசடியில் அவர் 16 லட்ச ரூபாய் ஏமாந்த விஷயம் தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.