யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த கும்பல்: வழக்கு என்ஐஏவிற்கு மாற்றம்

யூடியூப்  பார்த்து துப்பாக்கி தயாரித்த கும்பல்: வழக்கு என்ஐஏவிற்கு மாற்றம்

சேலம் மாவட்டத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு என்ஐஏவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணை துவங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் புளியம்பட்டி பகுதியில் கடந்த மே மாதம் போலீஸார் வாகனத் தணிக்கை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இரு இளைஞர்களிடம் நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து துப்பாக்கி தயாரிக்கப் பயன்படும் உதிரிகள், தோட்டாக்கள் மற்றும் வெடி மருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் நவீன் சக்ரவர்த்தி மற்றும் செவ்வாபேட்டை பகுதியைச் சேர்ந்த சஞ்சய் பிரகாஷ் ஆகிய இரு இளைஞர்கள் மீது ஆயுத சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஓமலூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் எல்டிடிஈ இயக்கத்தின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, யூடியூப் மூலம் துப்பாக்கிகள் செய்யக் கற்றுக்கொண்டதும், அந்த இயக்கத்தைப் போல ஒரு இயக்கத்தை தொடங்கி கல் குவாரிகளுக்காக மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை அழிக்கும் நபர்களுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை கையிலெடுக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
குறிப்பாக, கல் குவாரிகளில் இருந்து கற்களை ஏற்றி வரும் லாரிகளை வெடி வைத்து தகர்க்க துப்பாக்கி மற்றும் வெடி பொருட்களை தயார் செய்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சேலம் மாவட்டம் கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்த கபிலர் என்ற மற்றொரு இளைஞரையும் போலீஸார் கைது செய்து மூவரையும் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஆயுதங்களைத் தயார் செய்தது இவர்கள் சட்ட விரோத அமைப்புகளுக்கு கொடுத்தார்களா அல்லது விற்பனை செய்தார்களா என்பது குறித்தும், துப்பாக்கிகள் தயாரிக்கும் அளவிற்கு உதிரி பாகங்கள், வெடி மருந்து உள்ளிட்டவை பெற இவர்களுக்கு நிதி உதவி செய்தது யார்? மேலும் இவர்கள் தடைசெய்யப்பட்ட எல்டிடிஈ இயக்கத்தின் தொடர்பில் உள்ளனரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு முழுமையான பதில் கிட்டவில்லை. இந்த நிலையில் தற்போது, இவ்வழக்கு என்ஐஏவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளது. குற்றத்தின் தீவிரம் கருதியும், நாட்டின் பாதுகாப்பு கருதியும் இந்த வழக்கு என்ஐஏவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in