
சென்னை புறநகர் ரயிலில் உயிருக்கு ஆபத்தான முறையில் வாலிபர்கள் சாகச பயணம் செய்யும் வீடியோ வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பேருந்து மற்றும் ரயில்களில் ஆபத்தான முறையில் சாகச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதோடு மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை வெளியிட்டு அதிக லைக்குகள் பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் போது காவல்துறை தங்களது கவனத்திற்கு வந்த பிறகு சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்து அறிவுரை வழங்கி எச்சரிக்கை மட்டும் செய்து அனுப்புகின்றனர். கடுமையான தண்டனை இல்லாத காரணத்தினால் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொர்ந்து இதுபோன்று ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.
அவ்வாறு சென்னை புறநகர் ரயிலில் வாலிபர்கள் சிலர், கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் கிளம்பி செல்லும் போது பிளாட்பாரங்களில் காலை தேய்த்துக் கொண்டே ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். மேலும் புறநகர் ரயில் வேகமாக ஓடும் போது ரயிலின் வெளிப்புறம் தொங்கியபடியும், நடனமாடியும்
உயிருக்கு மிகவும் ஆபத்தான வகையில் பயணம் செய்யும் மற்றொரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டு வைரலாகி வருகிறது. ஐஎம்சி பிரவீன் என்ற இன்ஸ்டாகிராம் பெயரில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோக்களை பார்க்கும் பொதுமக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.