
டிராக்டரில் இருந்து தவறி விழுந்து கிளீனர் வேலை செய்துவந்த வாலிபர் பரிதாபமாக உயிர் இழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி மாவட்டம், கரந்தாநேரி பிள்ளையார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாரக்கனி. இவரது மகன் கணேசன்(18). இவர் டிராக்டர் ஒன்றில் கிளீனராக வேலை செய்து வந்தார். இவர் இன்று டிராக்டரில் நாங்குநேரியில் இருந்து தாழையூத்து நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டரில் இருந்து தவறி விழுந்தார்.
அப்போது டிராக்டரின் பின்னால் பொருத்தப்பட்டு இருந்த டேங்கர் டிரைலரின் டயர் கணேசன் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கணேசன் உடல் நசுங்கி உயிர் இழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கணேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். டிராக்டரில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.