டெல்லியில் டூவீலரில் மனைவியுடன் சென்ற இளைஞர் பட்டம் விட்ட மாஞ்சா நூலால் கழுத்து அறுபட்டு உயிரிழந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நக்லோய் பகுதியைச் சேர்ந்தவர் விபின்குமார்(35). இவர் ரக்ஷா பந்தன் அன்று தனது சகோதரியை சந்திக்க டூவீலரில் சென்றார். நாகோலியில் இருந்து லோனிக்கு டூவீலரில் தனது மனைவியுடன் நேற்று முன்தினம் சென்றார்.
சாஸ்தி பார்க் பகுதி பாலத்தில் வரும் போது அவர் கழுத்தில் திடீரென பறந்து வந்த மாஞ்சா கயிறு சுற்றியது. இதனால் அவர் கழுத்து அறுபட்டு ரத்தம் கொட்டியது. அத்துடன் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி ஆம்புலன்ஸை வரவழைத்து விபின்குமாரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அவர் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டில் முதல் மாஞ்சா கயிறுகளுடன் பட்டம் பறக்க டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாஞ்சா நூலை கண்ணாடித்துகள், வஜ்ரம், மயில் துத்தம், வண்ணப்பொடியை நூலில் தடவி தயாரிக்கின்றனர். இந்த நூல் கொண்டு பட்டம் விடும் போது டெல்லியில் குழந்தைகள் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர். தடையை மீறி மாஞ்சா நூலால் பட்டம் விட்டதால் மனைவி கண் முன் கணவர் இறந்த சம்பவம் டெல்லியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.