
சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி சென்ற விரைவு ரயில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே செல்லும் பொழுது இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுவாஞ்சேரி முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி என்பவரது மகன் பரணி (19). பத்தாம் வகுப்பு வரை படித்த பரணி, கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையானதாகவும் அதற்காக போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று சமீபத்தில் அங்கிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பரணியின் தவறான பழக்கத்தால் அவர் காதலித்த பெண் அவரிடம் பேச மறுத்துள்ளார். பலமுறை காதலியிடம் பேச முயன்றும் பேசாததால் பரணி விரக்தியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து திருநெல்வேலி சென்ற விரைவு ரயில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வருவதைக் கண்ட பரணி தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துக் கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீஸார் உடலைக் கைபற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.