`நான் சிபிஐ அதிகாரி; உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன்'- பெண்ணிடம் நகை, பணத்தை சுருட்டிய வாலிபர் கைது

`நான் சிபிஐ அதிகாரி; உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன்'- பெண்ணிடம் நகை, பணத்தை சுருட்டிய வாலிபர் கைது

சிபிஐ போல் நடித்த வேலை வாங்கித் தருவதாக கூறி பெண்ணிடம் நகை, பணத்தை சுருட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகர்கோவில் மேலராமன்புதூரை சேர்ந்த அழகேஸ்வரன் மனைவி உதிராதேவி (32). இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தன்னை சிபிஐ அதிகாரி என்று கூறியுள்ளார். பின்னர் அவர் பலருக்கும் வேலை வாங்கி கொடுத்து இருப்பதாகவும், உங்களுக்கும் வேலை வாங்கி தருவதாகவும் கூறி இருக்கிறார். முதற்கட்டமாக 60 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய தேவி உடனடியாக போன் பே மூலம் அந்த நபருக்கு பல தவணைகளில் 60 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். பிறகு தேவியின் வீட்டுக்கு நேரில் வந்த அவர், சான்றிதழ் வாங்கி சரிபார்த்து விட்டு வேலை தயாராக உள்ளது என கூறியுள்ளார்.

பின்னர் புகைப்படம் எடுக்க வேண்டும். எனவே கழுத்தில் அணிந்துள்ள நகையை கழற்றி வையுங்கள் என்று அந்த வாலிபர் கூறி இருக்கிறார். அந்த வாலிபரின் பேச்சை கேட்டு தான் அணிந்திருந்த 3 பவுன் நகையை கழற்றி அங்குள்ள நாற்காலியில் வைத்துள்ளார். அப்போது தனக்கு தாகம் எடுப்பதாகவும், தண்ணீர் கொண்டு வரும்படியும் அந்த வாலிபர் கூறியதும், தேவி சமையல் அறைக்கு சென்றார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது தேவியின் நகை மற்றும் செல்போன் ஆகியவற்றை காணவில்லை. சிபிஐ அதிகாரி போல நடித்து அந்த வாலிபர் 60 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததோடு 1 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான நகைகள் மற்றும் செல்போனையும் வீட்டில் திருடி சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து நேசமணிநகர் காவல்நிலையத்தில் தேவி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் வேலூர் சந்திரம்புதூர் பகுதியை சேர்ந்த அன்புகுமார் (27) என்பவரை நேற்று நேசமணி நகர் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in