`அணுகுமுறை மாற்றுங்கள்; உங்களின் செயல் நம்பிக்கையை குறைக்கும்'- காவலர்களை எச்சரிக்கும் டிஜிபி சைலேந்திர பாபு

`அணுகுமுறை மாற்றுங்கள்; உங்களின் செயல் நம்பிக்கையை குறைக்கும்'- காவலர்களை எச்சரிக்கும் டிஜிபி சைலேந்திர பாபு

தங்கள் பிரச்சினைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும் பொதுமக்களிடம் காவல்துறையினர் அதிருப்தியை வெளிப்படுத்தக் கூடாது என அனைத்து காவலர்களுக்கும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து காவல்துறையினருக்கும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு காவல் நிலையங்களில் தீர்வு கிடைக்காத பட்சத்தில் அதை உயர் அதிகாரிகளிடம் கொண்டு செல்லும்போது சம்மந்தப்பட்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார். சில காவல்துறையினர் அதிகாரத்தில் உச்சத்தில் தாங்களே இருப்பதாகவும், தாங்கள் யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என கருதுவதாக இருக்கின்றனர். இந்த எதிர்மறையான அணுகுமுறை காரணமாக சில காவல்துறையினர் புகார் அளிக்க வரும் பொதுமக்களை நேரடியாகவே வசைபாடும் சூழ்நிலையும் இருந்து வருகிறது. இது பொதுமக்கள் மனதில் காவல்துறை மீதான நம்பிக்கையை குறைக்கும். எந்தவொரு துறையிலும் சரியான அணுகுமுறை இருந்தால் மட்டுமே ஒரு அதிகாரியால் தங்கள் இலக்குகளை தொழிலிலும், வாழ்க்கையிலும் எட்ட முடியும். எந்தவொரு பதவியும் அதிகாரத்திற்கானது அல்ல, மக்களுக்காக சேவையாற்றவே அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காவல்துறையினரும் இறுதி அதிகாரம் படைத்தவர் இல்லை என்பதை உணர்ந்து, தவறு செய்தால் கேள்வி கேட்க தங்களுக்கு மேல் உயர் அதிகாரிகள், நீதிமன்றம், ஆணையம் போன்றவைகள் உள்ளதை அறிந்து நடக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் காவல்துறையினர் இதுபோன்ற எதிர்மறை அணுகுமுறைகளை கைவிட்டு, அதற்கு பதிலாக பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்த்து தங்களால் முடிந்தவரை தீர்வு காண முயற்சிப்பதும், தங்கள் செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் விளக்குவதும் போன்ற நேர்மறை மனப்பாண்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல உயர் அதிகாரிகளும் தங்கள் கீழ் பணியாற்றும் காவல் துறையினருக்கு நேர்மறை அணுகுமுறை குறித்த பயிற்சிகளை தொடர்ந்து வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் அனைத்து காவல்துறையினரும் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் எதிர்மறை அணுகுமுறையை கைவிடுத்து நேர்மறையான அணுகுமுறையுடன் பழகுவதை வாடிக்கையாக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in