மருத்துவ விடுப்பில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர் திடீர் தற்கொலை: உடல்நிலை பாதிப்பால் எடுத்த விபரீத முடிவு

மருத்துவ விடுப்பில் இருந்த ஆயுதப்படை பெண் காவலர் திடீர் தற்கொலை: உடல்நிலை பாதிப்பால் எடுத்த விபரீத முடிவு

நெல்லையில் ஆயுதப்படை பெண் காவலர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாநகரத்திற்கு உள்பட்ட பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறையில் வார்டனாக உள்ளார். இவரது மனைவி உமாமகேஸ்வரி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். உமா மகேஸ்வரி கடந்த ஓராண்டுகளாகவே பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் தவித்து வந்தார். இதனால் கடந்த ஓராண்டாகவே பணிக்குச் செல்லாமல் அவர் மருத்துவ விடுப்பிலேயே இருந்தார். இதனால் மருத்துவ விடுப்பிலேயே சிகிச்சையும் பெற்றுவந்தார்.

இந்த நிலையில் கயத்தாறு, கோட்டைப்புதூர் பகுதியில் இருக்கும் தன் தாய் வீட்டிற்குச் சென்றிருந்தார் உமாமகேஸ்வரி. அங்கு இன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது காவலர் உமா மகேஸ்வரி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் தெரிந்ததும் கயத்தாறு போலீஸார் உமா மகேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டதால் உமா மகேஸ்வரி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இருந்தும், அவர் தற்கொலைக்கு வேறு காரணங்கள் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in