
ஒடிசாவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்று கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிருபா ஆற்றில் ஒரு பெண் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் இருந்த முதலை ஒன்று குளித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணை இழுத்துச் சென்று கொன்று தின்று விட்டது.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்த பார்வையாளர்கள், தங்களது செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்து, அந்த காட்சிகளை சமூக ஊடகங்களிலும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், முதலையின் தாடைகளுக்கு இடையில் சிக்கி இருந்த பெண்ணை முதலை இழுத்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பின்னர் அந்த பெண்ணை முதலை, நார் நாராய் கிழித்து, முழுவதுமாக விழுங்கி விடுகிறது.
முதலையின் இரையாக பலியான அந்த பெண் ஜஜ்பூர் மாவட்டம் பலட்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜோத்ஸனா ராணி(35) என்பது விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து தகவல் அறிந்த தீயணைபு படையினர் அப்பகுதிக்கு சென்று எஞ்சியிருந்த அப்பெண்ணின் உடலை மீட்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.