
தினசரி 22 மணி நேரம் சேர்ந்தார்போல தூங்கி எழுந்தால் என்னாகும்? விசித்திர பாதிப்பு காரணமாக இல்லத்தரசி ஒருவர் இப்படி தவிர்க்க முடியாத தூக்கத்துக்கு ஆளாகி வருகிறார்.
நவீன வாழ்வியலில் தூக்கமின்மை பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. அன்றாடம் குறைந்தது 6 மணி நேரமேனும் தூங்கி எழுவதே ஆரோக்கியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் நடைமுறையில் பலருக்கும் அது சாத்தியம் இல்லாது போகிறது. அப்படியானவர்கள் இங்கிலாந்தின் ஜோனா காக்ஸ் குறித்து அறிந்துகொண்டே ஆகவேண்டும். ஒவ்வொரு முறை தூங்கி எழுந்த பிறகும், நாமெல்லாம் மணி என்ன என்று பார்ப்பதுபோல, நாள் என்ன என்று பார்ப்பதே ஜோனாவின் நடைமுறை. அந்தளவுக்கு தூங்கி எழுவார் அம்மணி.
ஜோனா காக்ஸ் ஓர் இல்லத்தரசி. 2 குழந்தைகளுக்கு தாயும் கூட. கடந்த சில வருடங்களாக இவரது தூங்கும் நேரம் படிப்படியாக அதிகரித்து வந்ததில், தற்போது தினத்துக்கு 22 மணி நேரம் வரை தூங்குகிறார். இந்தப் பிரச்சினைக்கு இவர் ஆளானபோது நிறையவே பயந்துபோனார். ஏதோ மனநலக்கோளாறு என்று மருத்துவமனைகளில் ஏறி இறங்கினார்.
அவற்றைவிட, விழித்திருக்கும் சொற்ப நேரத்தில் வேகமாக அன்றாட கடமைகளை முடிப்பதும் ஜோனாவுக்கு பெரும் சவாலானது. சமைக்கும்போதே தூங்கி விடுவதால், உண்பதற்கு தயாரான பொருட்களையும், புரோட்டின் பானங்களையும் வாங்கி வீட்டில் அடுக்கி வைத்திருக்கிறார். பார்த்து வந்த வேலை பறிபோனது மட்டுமன்றி, வாகனம் ஓட்டவும் பயப்படுகிறார்.
விழித்திருப்பதில் தடுமாற்றம் தரும் ’இடியோபதிக் ஹைபர்சோம்னியா’ என்ற விசித்திர காரணத்தை மருத்துவர்கள் ஆராய்ந்து சொன்ன பிறகே, அதற்கேற்ப வாழ தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறார். அப்படியும், எத்தனை மணி நேரம் தூங்கினாலும், முழுதாக தூக்கம் பாவிக்காத நபராகவே தென்படுவார். குறைந்தபட்சமாக ஒரு நாளின் சில நிமிடங்கள் மட்டுமே விழித்திருந்து இருக்கிறார். அதிகபட்சமாக சேர்ந்தார்போல ஒருமுறை 4 நாட்கள் தூங்கியிருக்கிறார்.