சென்னை மெரினா கடற்கரை டிஜிபி அலுவலகம் அருகில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது இருவர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் கன்யா பாபு. குழந்தைகள் நல ஆர்வலரான இவர் நாள்தோறும் சென்னை டிஜிபி அலுவலகம் அருகில் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்தவகையில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் டிஜிபி அலுவலகம் அருகில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது இரு இளைஞர்கள் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘’டிஜிபி அலுவலகம் அருகில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த இளைஞர்கள் ஆபாசமாக பேசினர். இதனால் நான் தட்டிக்கேட்டேன். அவர்கள் என்னை தாக்க முயன்றார்கள். டிஜிபி அலுவலக வாயிலில் நின்றிக் கொண்டிருந்த போலீஸிடம் புகார் அளித்தும் அவர் அதனை கண்டுக்கொள்ளவில்லை.
மீண்டும் அந்த நபர்கள் என்னை ஆபாசவார்த்தையால் திட்டி தாக்க முயன்றார்கள். இந்த பகுதியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டும்‘’ என குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.