
3042 சவரன் தங்க நகைகளை மோசடி செய்த பெண்ணிடம் இருந்து தங்கள் நகைகளை மீட்டுத் தருமாறு சீர்காழி காவல் நிலையத்துக்கு திரண்டு வந்த இஸ்லாமிய பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், எலந்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி மனைவி பாத்திமா நாச்சியார் (42). இவர் கடந்த 2011-ம் ஆண்டு மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, தங்க நகை பாதுகாப்பு நிறுவனம் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
தனது நிறுவனத்தில் நகையை கொண்டு வந்து கொடுத்தால், அதை 15 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறிய பாத்திமா நாச்சியார் அதற்காக ஒரு சவரனுக்கு 1,500 ரூபாய் தருவதாக ஆசைவார்த்தை கூறியிருக்கிறார். அதனால் பலரும் தங்கள் நகைகளை கொண்டுவந்து கொடுத்திருக்கின்றனர். அவர்களுக்கு சொன்னபடி 15 நாட்களில் நகையையும் 1,500 ரூபாயும் திருப்பிக் கொடுத்திருக்கிறார்.
இதனால் பெண்கள் பலரும் தங்கள் வீட்டில் இருப்பில் இருந்த அத்தனை நகைகளையும் கொண்டு வந்து இவரிடம் கொடுத்திருக்கின்றனர். சிதம்பரம், கொடிப்பள்ளம், புத்தூர், சீர்காழி, கீராநல்லூர், வடகரை, கிளியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் தங்களது நகையை கொடுத்துள்ளனர்.
முதல் 3 மாதங்களுக்கு தான் சொன்னபடி நகை கொடுத்தவர்களிடம் 15 நாட்களில் நகைகளை திருப்பி கொடுத்துள்ளார். பின்னர் நகைகளை கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நகை கொடுத்த பெண்கள் தொடர்ந்து தங்களது நகைகளை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியதை அடுத்து பாத்திமா நாச்சியார் மயிலாடுதுறையில் குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு கும்பகோணத்தில் தனது வீட்டிற்கு குடி பெயர்ந்து உள்ளார்.
தொடர்ந்து தனது நகைகளை கேட்டு பலமுறை அலைந்து திரிந்த போதிலும் 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நகை திரும்ப கிடைக்காததால் சீர்காழியை சேர்ந்த மஜிலாபானு என்பவர் கடந்த 24 -ம் தேதி தனது நகையை மீட்டு தரக்கோரி சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சீர்காழி காவல்துறையினர் சம்மன் அனுப்பி பாத்திமா நாச்சியாரை விசாரணைக்கு அழைத்தனர். பாத்திமா நாச்சியார் விசாரணைக்காக சீர்காழி காவல்நிலையத்தில் நேற்று ஆஜர் ஆனார்.
அவர் வந்திருப்பதை அறிந்ததும் பாத்திமா நாச்சியாரிடம் நகைகளை கொடுத்து ஏமாற்றம் அடைந்த ஏராளமான இஸ்லாமிய பெண்கள் சீர்காழி காவல்நிலையத்தில் திரண்டனர். பாத்திமா நாச்சியாரிடம் இருந்து தங்களது 3042 சவரன் தங்க நகைகளை மீட்டு தரக்கோரி வலியுறுத்தினர்.
இதனைத்தொடர்ந்து சீர்காழி காவல்துறையினர் பாத்திமா நாச்சியாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாத்திமா நாச்சியாரிடம் நகைகளைக் கொடுத்து ஏமாந்த பெண்களின் எண்ணிக்கை பல நூறு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சீர்காழியில் கிலோ கணக்கில் தங்க நகைகளை மோசடி செய்ததாக ஏராளமான இஸ்லாமிய பெண்கள் காவல்நிலையத்தில் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.