
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லன்விளையில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோயில் அருகில் தலையில் காயங்களுடன் மூதாட்டி மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குமரிமாவட்டம், தக்கலை அருகில் உள்ளது கொல்லன்விளை. இங்குள்ள பார்த்தசாரதி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் இந்தக் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். இந்நிலையில் அந்தக் கோயிலின் அருகில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது தலையிலும் காயம் இருந்தது. இதைப் பார்த்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணைப் பார்த்தபோது அவர் ஏற்கெனவே இறந்திருப்பது தெரியவந்தது. கோயிலுக்கு வந்த இடத்தில் அவர் மயங்கி விழுந்து தலையில் அடிபட்டு இறந்தாரா அல்லது அவரை யாரேனும் கல்லால் அடித்துக் கொன்றார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த மூதாட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பத்மநாபபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.