உத்தரப்பிரதேசத்தில் வாகனத்தில் இருந்து நெல் மூட்டைகள் தங்கள் வீட்டு வாசலில் விழுந்ததால் ஆத்திரமடைந்த 4 பேர் பெண்ணை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜஹானாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது கனகோர் . இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா காளி(56). இவர் வயலில் நெல் பயிரிட்டிருந்தார். தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை நேற்று முன்தினம் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சந்திரா காளி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒருவரின் வீட்டு வாசலில் நெல் மூட்டைகள் வண்டியில் இருந்து விழுந்து கொட்டியது. இதனால் அந்த வீட்டில் இருந்த பெண்கள், சந்திரா காளியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வாய்த்தகராறு முற்றிய நிலையில், அந்த வீட்டில் இருந்த ஆண் தனது மூன்று மகன்களுடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் சந்திரா காளியை ஓட ஓட விரட்டி தாக்கினார். இதில் தலை உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் சந்திரா காளி மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அவரது மகன் ஜெகதீஷ் பிரசாத், தனது தாயை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரா காளி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஜஹானாபாத் காவல் நிலையத்தில் ஜெகதீஷ் பிரசாத் புகார் அளித்தார். சந்திரா காளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.