
சுங்கக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை திரும்பப் பெறுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு முன்னாள் முதல்வரும், ’அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளருமான’ ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
‘ஏப்ரல் 1 முதல் நெடுஞ்சாலைகளின் சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிகளவு சுங்கச்சாவடிகள் அதிகம் உள்ளன. அவற்றில் பலவும் அவற்றுக்கான காலத்தை கடந்தும் இயங்கி வருகின்றன. அவற்றில் பலவும் முறையான சாலை பராமரிப்பை மேற்கொள்வதில்லை.
வருடந்தோறும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலிலும் 10% சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவற்றை உயர்த்துமாறு தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது அமலுக்கு வரும்போது, சங்கிலித் தொடர்வினையாக விலைவாசி உயர்வும், சாமானியர்களின் வாழ்வாதார இடர்பாடுகளிலும் அவை எதிரொலிக்கும்.
எனவே சுங்கக்கட்டணத்தை உயர்த்தும் முடிவினை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதற்கு உரிய அழுத்தத்தினை தமிழக அரசு வழங்க வேண்டும்’ என்ற கருத்துக்களை உள்ளடக்கிய அறிக்கையினை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளராக அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.