மின் கட்டண உயர்வுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குமா?- அரசு மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணை

மின் கட்டண உயர்வுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குமா?- அரசு மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணை

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், அருணா அலாய்ஸ் ஸ்டீல் நிறுவன மேலாண்மை இயக்குநர் அருண் அருணாச்சலம், ஸ்ரீபதி பேப்பர் அன்ட் போர்ட்ஸ் நிறுவன பொது மேலாளர் ஜி.ஸ்ரீனிவாசன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் (தொழில்நுட்ப உறுப்பினர், சட்டத்துறை உறுப்பினர்) இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை உறுப்பினர் இல்லை.

இந்நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. தற்போது பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் பணியிடத்தை நிரப்பும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவமிநாதன், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை சேர்ந்தவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். இதனால் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம். மனுதாரர்கள் தங்களின் ஆட்சேபணைகள் மற்றும் கோரிக்கைகளை ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கலாம்" என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது. அப்போது, மின்சார கட்டண உயர்வுக்கு தடை நீடிக்குமா? அல்லது தடை விலக்கப்படுமா? என்பது தெரியவரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in