மனைவியின் அதிகாலை போன் உரையாடல்: அயர்ன்பாக்ஸ் வயரால் கழுத்து நெரித்து கொன்ற கணவன்!

மனைவியின் அதிகாலை போன் உரையாடல்: அயர்ன்பாக்ஸ் வயரால் கழுத்து நெரித்து கொன்ற கணவன்!

அதிகாலையில் கணவனுக்குத் தெரியாமல் போனில் பேசிய மனைவியை அயர்ன்பாக்ஸ் வயரால் கழுத்து நெரித்துக் கொன்ற கணவனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கழனிபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(27). இவரின் மனைவி சுதாமதி (25).  இவர்கள் இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மறைமலைநகரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்த போது, காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுதாமதி கடந்த 5-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். துணிகளை அயர்ன் செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி அவர் இறந்து விட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் த ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளார். மேலும் சுதாமதி உடலை அவசர, அவசரமாக அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்துவந்தார். சுதாமதி இறப்பில் சந்தேகம் உள்ளதாக வருவாய்த்துறையினர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீஸார் சுதாமதியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவரின் முதல் கட்ட ஆய்வறிக்கையில், தலையில் பலத்த காயம் உள்ளதாகவும், அதன் காரணமாக சுதாமதி இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சுதாமதியின் அண்ணன் சதீஷ்குமார் மதுராந்தகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ரஞ்சித் குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் கடந்த 5-ம் தேதி அதிகாலையில் சுதாமதி செல்போனில் ஒருவருடன் பேசியிருந்ததை ரஞ்சித் குமார் கண்டித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கட்டையால் ரஞ்சித்குமார் தாக்கியுள்ளார். மேலும் அயர்ன்பாக்ஸ் வயரைக் கொண்டு அவரின் கழுத்தை இறுக்கிக் கொன்றுள்ளதும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரஞ்சித் குமாரை இன்று மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in